Tuesday, July 17, 2018

நம்மில் ஒவ்வொருவரும் தன் அப்பாவுடன் அதிகம் டிராவல் செய்திருப்போம். ஆனால் எனக்கு ஏனோ அது மிகச்சில நாட்களே கிடைத்தது. காரணம் அவர் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார். எர்னாக்குளம், குண்டக்கல், கிறிஷ்ணராஜபுரம் என்று பல மாநிலம் பல வருடங்கள் வாரநாட்களில் அவர் வேலை செய்து சனி ஞாயிறு மட்டும் வீட்டுக்கு வருவார். அதிலும் நடுவில் ஐந்து வருடங்கள் வருடத்திற்கு 30 நாட்கள் மட்டும் பார்க்க முடிந்தது. ரயில்வே வேலையில் 1985ல் சம்பளம் 450 மட்டுமே. குடும்பம் ஐந்து குழந்தைகள் என்று சிரமம். தாத்தா இந்திய அளவில் கால்பந்துக்கோப்பை விளையாட்டு திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் பண்ண முயற்சித்து பணம் இழந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கும். அப்பா அவராக முன்னேற வேண்டிய சூழல் ஒரு டிரங்க் பெட்டியில் தொடங்கியது. வீட்டிலேயே கிலோத்ஸ் பாண்ட், ஷர்ட், சாரீ பிஸினஸ் செய்தார்.

ஒன்பதாவது படிக்கும் போது வகுப்பிலேயே சின்ன பையன். உயர வரிசையில் நிற்கவைத்தால் நான் தான் முதலில் நிற்பேன். அந்த நேரத்தில் அமைந்ததுதான் நானும் என் அப்பாவும் செய்த இந்த இனிமையான பயணம். ஐ மிஸ் ஹிம். கீதை மற்றும் வேறொரு புத்தகமும் எடுத்து வைத்துக்கொண்டேன். பயணத்தில் தாதர் எக்ஸ்பிரஸ் போகும்போது முன்பதிவு செய்யாமல் இங்குள்ள போர்டரிடம் பணம் கொடுத்து பெர்த் பெற்றாலும் வடநாட்டில் இருக்கையை இழக்க நேரிடும். இல்லை என்றால் சலோ சலோ என்று அடிப்பார்கள். அவர்கள் 4.30 மணிக்கு எழுந்து வண்டி பிடித்து 3 மணிநேரம் சென்று பம்பாயில் வேலை செய்வார்கள். அதுவும் கடினம்தான். உட்கார்ந்து தூங்கி கொண்டே செல்வார்கள். முன்பதிவு செய்தால் ரயில்வே பாஸ் கையெழுத்து ஆகிவிடும். மறுபடி உபயோகிக்க முடியாது. எங்கள் இலக்கு பம்பாய் சூரத் ஆமதாபாத் மூன்று இடத்திலும் சென்று துணிகள் வாங்கி வர வேண்டும். வெளிநாட்டு விமானத்தில் பயணம் செய்யும் போது எடுத்துச்செல்லும் பெரிய 2 பெட்டியை நிறப்பி, மற்றும் எங்கள் உடைக்கான ஒரு சிறிய பெட்டியையும் எடுத்து வருவோம்.

போகும்போது ஜங்ஷனில் 15 நிமிடம் நிற்கும்போது மதியம் உணவு ஒருவர் 7 நிமிடம் என்று ஓடிச்சென்று இருவரும் சாப்பிட்டு வருவோம். வண்டி கிளம்பிவிட்டால் மொழியும் தேரியாத இடத்தில் என்ன செய்வது என்று எனக்கு திக் திக் என்று இருக்கும்.
சூரத்தில் சாரீ மார்கெட்டுக்கு நடந்தே கூட்டிச்செல்வார். ஒரு சாரீயில் 10 ரூபாய் அதிகமாக வைத்தால் ஆட்டோவீல் போக 3ரூ வார 3ரூ என்று சரியாகிவிடுமே என்று சொன்னாலும் கேட்க மாட்டார். திருச்சி சாரதாஸை விட குறைவாக விற்கவேண்டும் என்பார். அதை விட பெரிய அளவில் வர எண்ணம். ஆனால் தான் கடன் பெற்ற பணத்தில் வாங்கிய துணிகளை தம்பியிடம் கொடுத்து விற்கச்சொல்லி பிசினஸ் லாஸ் ஆகியது ஒரு தனி கதை.

பம்பாயில் பாண்ட் மற்றும் ஷர்ட் பிட்ஸ் வாங்கிவிட்டு ரயில் ஏற வந்தோம். என் தலையில் ஒரு பெரிய சூட்கேஸ், அப்பாவின் தலையில் எங்கள் இருவரின் துணிமணியும் சேர்த்து இரண்டு சூட்கேஸ் மற்றும் கையில் இரு மஞ்சப்பையில் துணி, நேரமின்மையால் அவசரமாக ரயில் நிலையம் ஓடி வந்தோம். அப்போது தாதர் ரயில் நிலையத்தில் ஒரு ரயில்வே காவல் அதிகாரி எங்களை நிறுத்தினார். பெட்டில என்ன என்று ஹிந்தியில் கேட்டார். அப்பா, நான் ஒரு ரயில்வே ஸ்டாஃப் சார். இதுமாதிரி பிசினஸ் நிமித்தமாக வாங்கி செல்கிறேன் என்றார். ரயில் வந்து விட்டது. அவர் பெட்டியை திறக்கச்சொன்னார். அப்பா ரயில் வந்திருச்சு சார் என்று கெஞ்சியும் அவர் திறக்கச்சொல்லி இரு பெட்டியையும் பார்த்தார். வண்டி புறப்பட்டவுடன் எங்களை போகச்சொன்னார். அன்ரிசர்வ்ட் பெட்டி சென்றுவிட்டது. நாங்கள் தலையில் பெட்டியுடன் ஓடினோம். என் தலயில் இருந்த பெட்டி மெல்ல மெல்ல நழுவி என் முதுகில் அமர்ந்தது. அந்த வயதில் அது அதிக வலுவாக தெரிந்தது. அப்பா ஓடிக்கொண்டே ஒவ்வொரு ரிசர்வ்ட் பெட்டியிலும் ஏற முயன்றார். கதவு மூடப்பட்டது. நான் பின்னே ஓடி வருகிறேன். ஏமாற்றமும் வெறுப்பும் அதிகமானது. ஒரு டி‌டி‌ஆர் ஏறுங்க அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மாறிக்கோங்க என்றார். அப்பா அவர் வைத்திருந்ததை உள்ளே தூக்கிப்போட்டு ரயிலில் ஏறி என் பெட்டியை வாங்கி உள்வைத்து, ஓடி வந்த என்னையும் கைப்பிடித்தார். அந்த பிடியின் அழுத்தமும் அவர் கண்களின் ஈரமும் டி‌டி‌ஆரின் உள்ளுக்குள் ஈரமும் என் மனதை என்னவோ செய்தது. அந்த டி‌டி‌ஆரின் முகம், பெயர் தெரியாது. இருந்தும் அவர் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் அட்வெண்ட்சர்ஸ் என்று நினைத்து சன்னலில் கம்பியில் சாய்ந்து வெளியில் கண்ட மின்சார கம்பி அனைத்தும் விலகியும் தறி நெய்வது போல் அதே சத்ததுடன் கூட வருவதை பார்த்து தறி கேட்டு ஓடிய தாதரில் காவிரியை காண ஆவலாய் அமர்ந்து இருந்தேன்.

No comments:

Post a Comment