Tuesday, July 17, 2018

PK Iyengar

வருடம் 1991. எஸ்‌எஸ்‌என் நேவல் அகாடெமி ஆபிசர் நேர்முகத்தேர்விற்கு அழைத்திருந்தார்கள். இன்டர்வியூ பயணச்செலவு திரும்ப பெற்றுக்கொள்ளலாம். புகைவண்டி பிடித்தாயிற்று. சென்ட்ரலில் இருந்து நாக்பூர் வழியாக ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ், பெயர் ஞாபகமில்லை. தேர்வை எதிர்நோக்கி கையில் அந்த வருட GK புத்தகத்தில் சிந்தனைகளை சிதறவிடாமல் மூழ்கினேன். 

அருகில் ஆங்கிலம் பேசக்கூடிய சிலரிடம் அவ்வப்போது ஊரு பேர் கேட்டுக்கொண்டு சந்திப்புகளில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு உட்கார்ந்திருந்தேன். நாக்பூர் வந்தடைந்ததும் வேறு சிலர் ஏறினர். இங்கு தான் நம் ஹீரோ அறிமுகமானார். சுமார் 50 வயதை கடந்தவர். பெயர் மணி என்பது மட்டும்தான் மனதில் உள்ளது. தமிழா என்று விசாரித்தார். ஆம் என்றும் இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி நேர்முகத்தேர்விற்கு வந்தேன் என்றும் கூறினேன். அதற்குள் என்னுடன் மற்றொருவரும் சேர்ந்து கொண்டார். எங்களை பெட்டி படுக்கயை பார்த்து, அடப்பாவி சுரேஷ், இங்க குளிர் அதிகம், ஆனால் நீ வேஷ்டியை போத்திக்கொள்வேன் என்கிறாய். பேசாமல் என்னுடன் வா. என் வீட்டில் நல்ல டூவேட் மற்றும் கம்போர்ட்டெர்ஸ் இருக்கிறது, எடுத்து செல் என்றார்.

நான் முன் பின் தெரியாதவரை எப்படி தொடர்வது என்று மனதில் பல எண்ணங்கள் தோன்றினாலும் நாளை காலை அங்கு 7 மணிக்கு சரியாக அகாடெமியில் இருக்க வேண்டும் என்று சொல்லி விடை பெற்றேன். இந்த இன்டர்வியூ பிராசஸ் ஒரு அருமையான அனுபவம். ஒரு வாரமே பேதமில்லாமல் பல மாநிலத்தவருடன் பழகும் அறிய வாய்ப்பு கிட்டும். எல்லோரும் பல வருடங்கள் பழகியது போல் நட்பு பாராட்டுவோம். Entrance exam, individual task, half group task, full group task, interview, breaks, food என்று அதற்கு தனி பத்தி எழுத வேண்டும். இவைகள் அனைத்திலும் மிளிர கடினமாக தோன்றவில்லை.

ஒருவாரம் கழித்து தேர்வு முடிந்தவுடன் ஓர் மன தையிரியத்தை வரவழைத்து மணி அவர்களை தொலைபேசியில் கூப்பிட்டேன். நான் கிளம்பறேன் சார் என்றேன். இல்ல இல்ல நீ வீட்டுக்கு வந்துதான் போகவேண்டும் என்று ஆர்‌பி‌ஐ (சார் இம்லி) காலனிக்கு ஆட்டோ பிடித்து வருமாறு அழைத்தார். வார விடுமுறை நாள் ஆதலால் பிட்டன் மார்க்கெட் எல்லாம் சென்றோம். இன்னும் இரண்டு நாள் மேலும் தங்குமாறு வற்புறுத்தினார்.

சகல வசதிகளுடன் தனி ரூம், எல்லாம் விலயுயர்ந்த பொருட்கள். பெரிய பெண் அமெரிக்காவில் ஐ‌பி‌எம் மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டு சென்று விட்டார். சிறிய பெண் காலேஜில் படித்து கொண்டிருக்கிறார். அம்மாவும் பெண்ணும் கேரளாவில் உள்ளனர் என்று புகைப்படங்களை காண்பித்தார்.

அன்று பணிப்பெண் வந்து அவருக்கு வைத்திருந்த உணவை மறந்து சென்று விட்டதால் நான் ஓடோடி சென்று அழைத்து வந்ததை கண்டு, ‘பார்த்தாயா சுரேஷ், உன் வீடு போல் உனக்கு பொறுப்பு வந்துவிட்டது’ என்றார். மறுநாள் சாவியை கொடுத்துவிட்டு நான் மாலை வருகிறேன் என்று சென்று விட்டார். நம்ப முடியாதுதான். ஆனால் அத்தனையும் சத்தியமான வாக்கு. நான் உதவி செய்ய நினைத்து அரிசி வைக்கலாம் என்று குக்கரில் தண்ணீர் வைக்காமல் அரிசிக்கு மட்டும் 1:3 வீதம் தண்ணீர் வைத்து, ப்ரெஷரில் மூடி பறந்து அரிசி தீய்ந்து பாத்திரம் கருகி அவர் வரும்வரை கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தேன்.

அழைப்பு மணி அடிக்கவும் என் பீட்டும் எகிறியது. திறந்தேன், சுரேஷ், பி‌கே ஐயங்காரிடமிருந்து என் சின்ன பெண்ணுக்கு வரன் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. இதுக்கென்னடா இவ்வளவு எக்ஸ்ஐட் ஆகிறார் என்று பார்த்தேன். அடப்பாவி, அவர் யாரென்றே தெரியாதா. செர்மேன் ஆஃப் அடாமிக் ரிசர்ச் அண்ட் கமிஷன் என்றார். ஓகே ஜி‌கே புக்ல பி‌கே இல்லை டி‌கே என்று சொல்லி கேக்கே பிக்கே ன்னு விழித்து அடுத்து அரிசி கதையை ஆரம்பித்தேன். மருபடியும் திட்டு. என் மனைவி வந்து கேட்டால் நான் என்ன சொல்வது. யார் பெற்ற பிள்ளயோ. உன் தாயிடம் நான் என்ன சொல்வேன் என்றாரே தவிர குக்கரை பற்றி அணு அளவும் கவலைப்படவில்லை. அவருக்கு அணு சம்பந்தப்பட்ட சம்பந்தம் அமைய பிரார்த்திதேன்.

மணி ஐயங்கார் மனிதருள் மாணிக்கம். பல முகமறியா மக்களுக்கு உதவியுள்ளார். அவர் எங்கு உள்ளார் என்று அணுவளவும் செய்தி இல்லை. சின்ன பெண்ணிற்கு அந்த சம்பந்தம் முடிந்ததா என்றும் தெரியாது. அசை போட்டுக்கொண்டே இருபுறமும் வானுயர டால்மேஷியன் படுத்திருப்பது போல் பனிபடர்ந்த மலைகள் நடுவில் சீரிச்செல்லும் வண்டி சக்கரத்தின் ஓசையுடன் வாழ்க்கை சக்கரத்தின் மாற்றங்களை எண்ணி காவிரி நோக்கி பயணித்தேன்.

No comments:

Post a Comment